https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Thursday, June 8, 2017

மார்க்சின் அரசியல் பரிணாமம் ( The Evolution of Marx) 4



iV

The production process of capital,The Process of Circulation of Capital, The process of Capitalistic production என காபிடலின் மூன்று பாகங்களுக்கும் பெயரிடப்பட்டது. இதற்கு முன்னர் 1857-58ல் மார்க்ஸ் எழுதிய அரசியல் பொருளாதார விமர்சனத்திற்கு அடிப்படைகள் என்பதை சோவியத் எடிட்டர்கள் 1939-41ல் வெளியிட்டனர். Grundrisse  கிராண்ரிஸ்சே என்கிற ஜெர்மன் டைட்டிலில் அது அறியப்படுகிறது. மார்க்ஸ் 1859ல்  அரசியல் பொருளாதார விமர்சனங்கள் வெளியிட்டார். கார்ல் காட்ஸ்கி தேடிப்பிடித்து உபரிமதிப்பு கோட்பாடுகள் என்பதை 1905-10 காலத்தில் வெளிக்கொணர்கிறர். டேவிட் மக்லெல்லன் கிராண்ரிஸ்ஸே குறித்த ஆய்வுகளை செய்துள்ளார்.
 காபிடலில் லேபர் என்பது லேபர், லேபர் பவர் என விளக்கப்படும். தனியார் சொத்துரிமை என்பது உற்பத்தி- மறு உற்பத்தி எனவும், மதிப்பு என்பது உபரிமதிப்புவரை விளக்கப்படும். Relative Surplus value, Absoulte surplus எனவும் மார்க்ஸ் பேசுகிறார். அவர் ஆய்வுகள் விரிவடைய அவரது எழுத்தும் விரிந்து செல்லவேண்டியதானது. அரிஸ்டாட்டில் முதல் ரிகார்டோவரை கற்பது என்பது எவ்வளவு கடினமான வேலையாக இருந்தாலும் அவர் விரிவாக கற்க தவறவில்லை. Labour theory of value மார்க்சின் மையமான கோட்பாடானது. ஆடம்ஸ்மித் எடுத்துரைத்த மதிப்பு கோட்பாட்டை supply- demandல் பார்க்கவேண்டியிருக்கிறது. மார்க்சின் மதிப்பு கோட்பாட்டை புரட்சிகர குறுக்கல்வாதம் என விமர்சிப்போரும் உண்டு.

வேலைநாள் என்பது பற்றிய விளக்கமே காபிடலில் 75 பக்கங்கள் வருவதாக பெலிக்ஸ் குறிப்பிடுகிறார். machinery and Industry என்பது 140பக்கங்களில் பேசப்படுகிறது. It is a cold work  என பெலிக்ஸ் விமர்சித்தாலும் மனிதகுலத்தின் மீதான மகத்தான பிடிப்பில்லாமல் இவ்வேலை சாத்தியமில்லை (An undertaking like capital would have been impossible without a massive bond to humanity) எனவும் பெலிக்ஸ் மதிப்பிடாமல் இல்லை. காபிடலின் மையமே அதிகாரம் பற்றியதுதான். பாட்டாளிவர்க்கம் என்கிற புதிய வகைப்பட்ட வர்க்கத்தின் அதிகாரம் நோக்கி மார்க்ஸ் மனிதகுலத்தை நகர்த்த விரும்பினார். மார்க்சியர்களால், கம்யூனிஸ்ட் கட்சியால் தொழிலாளிவர்க்கத்தால் இது சாத்தியம்தான் என்பதும் நம்பப்படுகிறது. காபிடல் உலகின் பொருளாதார விளக்கத்திற்காக வரவில்லை- புரட்சிகர ஆட்சி அதிகார மாற்றம் என்பதற்கான விளக்கம் – அரசியல் என அதை விமர்சிப்போர் உண்டு.
1868ல் பிரஸ்ஸல்ஸ் நடந்த அகிலத்தின் கூட்டத்தில்  Marx deserves the very greatest credit for being the first economist to have subjected Capital to a scientific analysis என்கிற தீர்மானத்தை மார்க்ஸ் ஆதரவாளர்கள் கொணர்ந்தனர். Capital was an instrument of power. Its creation had been revoultionary politics of the highset order மூலதன புத்தகம் அதிகாரத்திற்கான கருவி- ஆக உயர் புரட்சிகர அரசியலை அது படைக்கிறது என தனது ஆய்வின் முடிவாக பெலிக்ஸ் குறிப்பிடுகிறார்.
பாட்டாளிகளின் தேசியம்(Proletarian Nationalism) என்பது அனைத்துவகை தேசிய பகைமைகளையும் முடிவிற்கு கொணரும் (end of all national hostilities) என்கிற கருத்திற்கும் மார்க்ஸ் வந்தார். பாட்டாளிகள் தங்கள் அரசியல் உயர் அதிகாரம் பெற தேசிய வர்க்கமாக தன்னை அமைத்துக்கொள்ள வேண்டும்.(.பூர்ஷ்வாக்கள் பொருளில் அல்ல it is itself national, though not in the bourgeois sense of the word)  என்றார் மார்க்ஸ். இந்துஸ்தான் அதுவரைபட்ட துன்பங்களையெல்லாம் விஞ்சக்கூடிய துயர்களை பிரிட்டன் அதன் மீது சுமத்தியுள்ளது என மார்க்ஸ் எழுதினார். அதேநேரத்தில் ஆசிய சமுகம் தனது விதியை மாற்றிக்கொள்ள இங்கிலாந்து  unconscious tool of history எனவும் குறிப்பிட்டார். இக்கருத்து விமர்சனத்திற்கும் உள்ளானது.
பிரான்சில் லூயி நெப்போலியன் உறவினர் விக்டர் நெப்போலியன் தொழிற்சங்க இயக்கத்திற்கு சற்று உதவிகரமாக இருந்தார். அரசிற்கு எதிரான தொழிற்தகராறுகளை மட்டுப்படுத்த விழைந்தார். 1862ல் அவர் 750 பிரான்ஸ் தொழிலாளர் லண்டன் சென்று தொழில் கண்காட்சி காண ஏற்பாட்டையும் நிதி உதவியையும் செய்தார். லண்டன் ட்ரேட்ஸ் கவுன்சில் தோழர்களுடன் பிரான்ஸ் தோழர்கள் கலந்துபேசி நிரந்தர அமைப்பு ஒன்றை செப் 28 1864ல் துவங்கினர். இது முதல் அகிலம் எனப்படுகிறது. இக்கூட்டத்திற்கு மார்க்ஸ் அழைக்கப்பட்டு அவர் உட்பட 34 உறுப்பினர் பன்னாட்டு பிரதிநிதி கமிட்டி ஒன்றை அமைக்கின்றனர். அதில் 9 பேர் கொண்ட துணைக்கமிட்டியிலும் மார்க்ஸ் இடம்பெற்றார். மார்க்சின் ஆளுமையாலும் அறிவாற்றலாலும் விரைவில் அதன் தலைமை பாத்திரத்தை  அவரால் எடுக்க முடிந்தது.
German workers Educational Societyன் கரஸ்பாண்டெண்ட் செக்ரட்டரி ஆக மார்க்ஸ் இருந்தார். 1864ல் ஜார்ஜ் ஓட்ஜர் என்பார் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1866ல் மார்க்ஸ் பெயர் வந்தபோது அவர் மறுத்து ஓட்ஜெரையே தலைவராக இருக்க சொன்னார். கூட்டாக விவாதித்து முடிவு (Collective Decision) என்பதை மார்க்ஸ் வற்புறுத்தி வந்தார். பொதுவாக விவாதங்களுக்கு பின்னர் மார்க்சின் கருத்துக்களே முடிவாக வரத்துவங்கின. அகிலம் துவங்கிய இரண்டே ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான தொழிற்சங்கங்கள், சொசைட்டிகள், கில்ட்கள், இலக்கிய கழகங்கள், மொழிப்போராளிகள் என அவ்வமைப்பு விரிவடைந்தது. அதனால் பல்வேறு புதிய பிரச்சனைகளும் வரத்துவங்கின. வேலைநிறுத்த காலங்களில் அகிலம் போராளிகளுடன் நின்று உதவியது. எட்டுமணிநேர வேலை என்பதை தீர்மானமாக்கியது. அகிலம் வழியாக சிந்தனையையும் அமைப்பின் செயல்பாட்டையும் ஒருங்கிணைக்க மார்க்ஸ் முயன்றார்.
குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு என்கிற முழக்கம் எடுபடவில்லையெனினும் அதற்கு சட்ட முறைகள் அவசியம் என அகிலம் சார்ந்தவர் கோரினர். லசேன் 1867, பிரஸ்ஸல்ஸ் 1868, பாசல் 1869 மாநாடுகளில் மார்க்சின் செல்வாக்கு கூடியது.
கம்யூன் என்பது பாரிசில் முனிசிபல் நிர்வாகத்தை குறித்தது. 1870 செப்டம்பரில் லூயி நெப்போலியன் சரணடைந்தார். பூர்ஷ்வாக்களின் அரசியல்வாதிகள் தற்காலிக அரசாங்கம் அமைத்தனர். பாரிசில் புரட்சியாளர்கள் அவசரப்பட்டு இந்த அரசாங்கத்திற்கு எதிராக போய்விடவேண்டாம் என மார்க்ஸ் உட்பட அகிலம் கருதியது.  கம்யூன் எழுச்சி 72 நாட்கள் நீடித்தது. இருந்த நாட்களில் முற்போக்கான நடவடிகைகளை, சில பொருளாதார நடவடிக்கைகளை எடுத்தனர். ஆறுமாத நிலவாடகை தள்ளுபடி, வங்கிகடன் தவணைகள் அதிகரிப்பு, கத்தோலிக்க மதப்பிடியிலிருந்து கல்விமுறையினை விடுவிக்க முயற்சி போன்றவைகளை அறிவித்தனர்.  கத்தோலிக்க பெற்றோர் சிலர் பள்ளி புகுந்து புதிய முறைகளை முறியடிக்க முயன்றதும் நடந்தது. வீட்டு சாமான்கள் விலை குறைப்பு, அதிகாரிகள் அலுவலர் சமபளத்தை கட்டுக்குள் கொணர்தல், தொழிலாளர்களுக்கு கூட்டுறவு நிறுவனங்கள், 34 புதிய தொழிற்சங்கங்களை அமைத்துக் கொடுத்தல்,  ரொட்டி தொழிலாளர் இரவுப்பணிக்கு தடை, புரட்சிகர நீதிமன்றம் நிறுவுதல் போன்றவையும் அமுலுக்கு வந்தன.
1871 மே 21- 28 ஆகிய இரு  ஞாயிறுக்குள் பாரிஸ் இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டது. 20000 கம்யூனார்ட்ஸ் உயிர் பறிபோனது. முப்பதாயிரத்திற்கும் மேலானவர் சிறைபிடிக்கப்பட்டனர்.  ஆயிரக்கணக்கானோர் நாடு கடத்தப்பட்டனர். சித்திரவதை கூடத்திற்கு அனுப்பபட்டனர். மார்க்ஸிற்கு பாரிஸ் கம்யூன் வெற்றி குறித்து சந்தேகங்கள் இருப்பினும் அதனை அற்புத வரலாற்று முன்முயற்சி, மாபெரும் தியாகம் என வர்ணித்திருந்தார். கம்யூன் வீழ்ச்சியை அடுத்து மார்க்ஸ் The Civil war in France  எழுதினார்.
செப்டம்பர் 4 1870 எழுச்சியை தொழிலாளர்கள், அவர்களின் பிரதிநிதிகளின்  அரசாங்கம் என்றே மார்க்ஸ் அங்கீகரித்தார். கம்யூன் நாடாளுமன்றம் மட்டுமல்லாமல், எக்ஸிகுயுட்டிவ் லெஜிஸ்லேட்டிவ் அமைப்பாகவும் உருவானது என்றார். கம்யூனில் பெரும்பான்மை சோசலிஸ்ட்கள் இல்லை என்பதையும் மார்க்ஸ் குறிப்பிடாமல் இல்லை. working men's paris, with its commune, will be forever celebrated as the glorious harbinger of a new society  என்கிற அங்கீகாரத்தை மார்க்ஸ் அதற்கு வழங்கினார். மார்க்ஸ் பாரிஸ் கம்யூனை உற்சாகப்படுத்தி எழுதியதை இசையா பெர்லின்  என்ற சிந்தனையாளர் revoultionary hagiography புரட்சியாளர்களின் திருத்தொண்டு வரலாறு என குறிப்பிட்டார்.
Newyork world க்கு மார்க்ஸ் கொடுத்த பேட்டி ஜூல 18 1871ல் வெளியானது. அதில் அவர் அகிலம் என்பது தொழிலாளர்கள் இணைந்து உருவாக்கிக்கொண்ட ஒன்று. அதன் நோக்கம் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றி தொழிலாளர்க்கு பொருளாதார விடுதலையை பெற்றுத்தருவது என விளக்குகிறார். 1871 ஜூனில் பிரஞ்சு அரசாங்கம் சார்பில் அகிலத்தை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டது. நாத்திக, கம்யூனிச சொசைட்டி , வெகுஜனங்களின் மிருகத்தனமான சக்தியது என்றது அவ்வறிக்கை.
அகிலத்தின் லண்டன் காங்கிரஸ் செப்டம்பர் 17-23 1871ல் நடந்தது. பகுனினுடன் கருத்து வேறுபாடுகள் அதிகரித்திருந்தது. 1872 செப்டம்பரில் அடுத்த காங்கிரஸ் ஹேகில் நடந்தது, மார்க்ஸ் பங்கேற்றார். சார்பாளர் அனுமதி முற்றிலுமாக மார்க்ஸ்- எங்கெல்ஸ் வசம் இருந்தது. அனுமதிக்கப்பட்ட 61 சார்பாளர்களில் பெரும்பான்மை மார்க்சை ஏற்பவர்கள்.. உடல்நிலை பாதிக்கப்பட்ட பகுனின் காங்கிரஸிற்கு வரவில்லை.
Centralisation of power in the hands of few  or free federation என்கிற இரு சிந்தனைகளின் மோதல் களமாக அகிலத்தின் காங்கிரஸ் இருந்தது என பிரதிநிதி ஒருவர் குறிப்பிட்டார். மார்க்ஸ் எதிர்ப்பாளர்கள் சிலர் இயக்கம் ஒரே ஒரு மூளையின் பிரதிநியாகக்கூடாது( The movement cannot represent the conception of a single brain ) என  விமர்சித்தனர். அகிலத்திற்கு விரோதமாக நடப்பவர்களை நீக்கலாம் என்கிற தீர்மானத்தில் மார்க்சால்  பெரும்பான்மை பெற முடிந்தது. ஆனால் எங்கெல்ஸால் முன்மொழியப்பட்ட தீர்மானமான அகிலத்தை நியுயார்க்கிற்கு மாற்றுவது என்பதற்கு கூடுதல் எதிர்ப்பு வந்தது. இறுதியில் அத்தீர்மானமும் முடிவானது. பகுனின் மீதான விசாரணைக்குழு முடிவுகள் நிருபணமானது என அகிலம் அவரை வெளியேற்றியது.
தொழிலாளர் தலைவர் ஃபெர்டினாண்ட் லசேல் மார்க்சின் கருத்துக்களை எடுத்து செல்பவராக இருந்தார். அரசியல் பொருளாதார விமர்சனங்கள் 1859ல் வெளிவர உதவினார். 1860களின் துவக்க ஆண்டுகளில் இருவருக்கும் இடையே  அடிக்கடி கடித பரிமாற்றங்கள் , சந்திப்புகள் நடந்தன. AGWA என்கிற அனைத்து ஜெர்மன் தொழிலாளர் சங்கத்தை லசேல் 1863 மே மாதம் உருவாக்கினார். அதை சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சி போன்றது என்றார். AGWAமுதல் ஆண்டிலேயே 5000 உறுப்பினர்களை பெற்றது. அரசின் உதவியுடனான தொழிலாளர் கூட்டுறவுகள் என்பதை லசேல் பேசினார். முதலாளித்துவத்திற்குள் சில நலன்கள் என்கிற அவரது நடவடிக்கை மார்க்சின் புரட்சிமூலம் முதலாளித்துவத்தை தூக்கி எறிதல் என்பதுடன் மாறுபட்டது.
GWA என்கிற ஜெர்மன் தொழிலாளர் அமைப்பினை லசேலுக்கு எதிரானவர்கள் பிராங்கபர்ட்டில் துவங்கினர். ஆகஸ்ட் பெபல் லீப்சிக்கில் லசேலுடன் சேராமல் இருந்தார். லீப்னெக்ட் பெபலுடன் இணைந்தார். லாசேல் மறைந்தபின், ஸ்விட்சர் தலைமை விலகலுக்கு பின்னர் 1875ல் இரு அமைப்புகளும் இணைந்து சோசியல் ஜனநாயக தொழிலாளர் கட்சியை 1875ல் உருவாக்கினர். இணைப்பு குறித்து லிப்னெக்ட் முன்கூட்டியே மார்க்சுடன் விவாதிக்கவில்லை என்றும், பத்ரிக்கை செய்தி மூலமே மார்க்ஸ் இதை அறிந்தார் எனவும் பெலிக்ஸ் கூறுகிறார். கோதா திட்டம் குறித்த மார்க்சின் விமர்சனங்களையும் லீப்னெக்ட் வெளியே தெரிவிக்காமல் பின்னர் 1891ல்தான் வெளியானது எனவும் பெலிக்ஸ் கூறுகிறார்
Eclectic Socialism என்கிற பன்முக சோசலிச கருத்துக்களுடன் பார்வையில்லாத நிலையிலும் டூரிங் சுற்றிவந்தார். அவரை பாராட்டி கட்டுரைகளை பெபல் லீப்னெக்ட் பத்ரிக்கையில் எழுதினார்.  marx using demi sciences and dwarfish philosophy என்கிற கருத்தை டூரிங் சொல்லிவந்தார். 1877-78 ல் டூரிங்கிற்கு பதிலை எங்கெல்ஸ் எழுதி டூரிங்கிற்கு மறுப்பு புத்தகமாக வந்தது. 1880ல் சோசியல் டெமாக்ரடிக் கட்சியின் பத்ரிக்கை பொறுப்பை கார்ல் ஹிர்ச் என்பவருக்கு தரவேண்டும் என மார்க்ஸ் நினைத்தார். பெபலும் லீப்னெக்ட்டும் பெர்ன்ஸ்டைனுக்கு கொடுக்க விரும்பினர்.
SDP என்கிற சோசலிச ஜனநாயக கட்சி 1880களில் பெரிதாக வளர்ந்தது. அதிக வாக்குகளையும் பெறத்துவங்கியது. மார்க்ஸ் மறைந்தாலும் எங்கெல்ஸ் இதை கண்ணுற்றார். 1878ல் அக்கட்சியின் பெயரால் 75 பத்ரிக்கைகள் வந்தன. 1896ல் பெர்ன்ஸ்டைன் Evoultionary Socialism என்பதை எழுத துவங்கினார். பெபல் இதை விமர்சித்தார். புரட்சி என்பது நோக்கம் என்பதிலிருந்து பக்தி (as object to piety) என போய்விட்டதாக பெலிக்ஸ் குறிப்பிடுகிறார்.
ருஷ்யா செயிண்ட் பீட்டர்ஸ்பர்கில் ஏப்ரல் 1872ல் மூலதனம் முதல் வால்யூம் 900 காப்பிகள் விற்றன. 1870 ல் பகுனினுடன் தொடர்பு இல்லை என தெரிவித்து நிகொலாய் உதின் மார்க்சுடன் தொடர்புகளை மேற்கொண்டார். பகுனினை எதிர்த்து மார்க்சுடன் நிகோலாய் நின்றார்.
1860ல் ஜென்னிமார்க்ஸ் தனது 46ஆம் வயதில் சின்னம்மை நோயால் தாக்கப்பட்டார். மார்க்சிற்கு நகல் எழுதி தருவதில் துணையாக இருந்தாலும் சில காலம் ஓய்விற்காக தனியே சென்றார். இக்காலங்களில் மகள் உதவியாக மார்க்சிற்கு இருந்தார். மகள் ஜென்னிலாங்கேவிற்கு ஆஸ்த்மா தொந்திரவு மட்டுமல்லாமல், சில நேரங்களில் மாமியார் தொந்திரவுகளும் இருந்தது. மகள் லாராவிற்கு மூன்று குழந்தைகள் இறந்த துக்கம் இருந்தது. 1911ல் அவர் தனது கணவருடன் தற்கொலை செய்துகொண்டார். மகள் எலியனார் தனது 43ஆம் வயதில் 1898ல் விஷம் அருந்தி மறைந்தார். 1881 டிசம்பர் 2 அன்று லிவர் கான்சரால் பாதிக்கப்பட்டு ஜென்னி மார்க்ஸ் இறந்தார். ஜென்னியின் இழப்பு மார்க்சின் உடலை மேலும் பலவீனப்படுத்தியது. 1883ஜனவரி 10 அன்று  5 குழந்தைகளின் தாயான  மார்க்சின் மகள் ஜென்னிலாங்கெ  புற்றுநோய் தாக்கி மரணம் அடைந்தார். மார்க்ஸ் தனது இருக்கையில் அமர்ந்தபடியே மார்ச் 14 1883ல் மறைந்தார்.
மார்க்ஸ் காலத்தில் புகழ்வாய்ந்த ஆட்சியாளர்களாக  பிஸ்மார்க், count cavour(Italy) கிளாட்ஸ்டோன், டிஸ்ரேலி இருந்தனர். ஆனால் எதிர்காலத்திற்கான மகத்தான திட்டமிடலில் மார்க்ஸ் இருந்தார். அவர் பேசிய சர்வதேசியம், பாட்டாளிவர்க்கம்  அவரை உலகத் தலைவராக மாற்றின. அவரின் பெயரால் எழாத இயக்கமென உலகில் எங்கும் இல்லை என்ற நிலை அவரின்  பிறந்த 125 ஆண்டுகளிலேயே  ஏற்பட்டுவிட்டது. அவர் உலகின் சர்வ இடங்களையும் சென்றடைந்தார். மார்க்ஸ் புரட்சிகர இயக்கங்களின் உந்துவிசையாக தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்.  இன்றும் உலகின் மையமான விவாதம் அவரை சுற்றியே நடந்து வருகிறது.
Ref:

Marx as Politician- Prof David Felix, Newyork

No comments:

Post a Comment